பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
திருத்தாய் செம்போத்தே,!*
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர*
திருத்தாய் செம்போத்தே! (2)
கரையாய் காக்கைப்பிள்ளாய்,*
கருமாமுகில் போல்நிறத்தன்,*
உரைஆர் தொல்புகழ்* உத்தமனை வர*
கரையாய் காக்கைப்பிள்ளாய்!
கூவாய் பூங்குயிலே,*
குளிர்மாரி தடுத்துஉகந்த*
மாவாய் கீண்ட* மணிவண்ணனை வர,*
கூவாய் பூங்குயிலே!
கொட்டாய் பல்லிக்குட்டி,*
குடம்ஆடி உலகுஅளந்த,*
மட்டுஆர் பூங்குழல்* மாதவனை வர,*
கொட்டாய் பல்லிக்குட்டி!
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
கோழி கூஎன்னுமால்,*
தோழி! நான்என்செய்கேன்,*
ஆழி வண்ணர்* வரும்பொழுது ஆயிற்று*
கோழி கூஎன்னுமால்.
காமற்கு என்கடவேன்,*
கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*
பூமேல் ஐங்கணை* கோத்துப் புகுந்துஎய்ய,*
காமற்கு என்கடவேன்!
இங்கே போதும்கொலோ,*
இனவேல்நெடுங் கண்களிப்ப,*
கொங்குஆர் சோலைக்* குடந்தைக் கிடந்தமால்,*
இங்கே போதும்கொலோ! (2)
இன்னார் என்றுஅறியேன்,*
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன். (2)
தொண்டீர் பாடுமினோ,*
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,*
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ (2)
முனியே! நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!* என்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகல்ஒட்டேன்* ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே. (2)
மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருஆணை நின்ஆணை கண்டாய்*
நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே*
கூசம்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!
கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்அலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்குஎல்லாம்*
நாவிக் கமல முதல்கிழங்கே!* உம்பர் அந்ததுவே.
உம்பர்அம்தண் பாழேஓ!* அதனுள்மிசை நீயேஓ*
அம்பரம் நல்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*
உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே.
போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!* எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*
தீர இரும்புஉண்ட நீரதுபோல* என்ஆர்உயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராஅமுதுஆனாயே.
எனக்கு ஆராஅமுதாய்* எனதுஆவியை இன்உயிரை*
மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்* இனிஉண்டொழியாய்*
புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*
உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ!
கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைபெற்று இனிப் போக்குவனோ? (2)
பெற்றுஇனிப் போக்குவனோ* உன்னை என் தனிப்பேருயிரை*
உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயன் ஆவையாய்*
முற்றஇம் மூவுலகும்* பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு*
முற்றக் கரந்துஒளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ!
முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்*
முதல்தனி உன்னைஉன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*
முதல்தனி அங்கும்இங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவிலீஓ!
சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே! (2)
அவாஅறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாஅற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்* இவைஆயிரமும்* முடிந்த-
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2)