பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*
நாக்கு நின்னைஅல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2)
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்துகையானே!*
பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறுஒருவரோடு என் மனம் பற்றாது*
உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்* ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனைஅல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மைஆவது உன் கோயிலில்வாழும்* வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.
நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறைசோறு இவை வேண்டுவதில்லை*
அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே* அங்கங்கே அவைபோதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளைகோள் விடுத்தானே!
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை* துடவையும் கிணறும் இவைஎல்லாம்*
வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே* வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது* நச்சுவார் பலர் கேழலொன்றாகி*
கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!* குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை* ஓவாதே நமோ நாரணா என்று*
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம* வேத நாள்மலர் கொண்டு உன பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்* அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை* மெத்தையாக விரித்து* அதன்மேலே-
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்* காணலாங்கொல் என்றுஆசையினாலே*
உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி* உரோமகூபங்களாய்க்* கண்ணநீர்கள்-
துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்* சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.
வண்ணமால் வரையே குடையாக* மாரிகாத்தவனே! மதுசூதா!*
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!* காரணா! களிறுஅட்டபிரானே!*
எண்ணுவார் இடரைக் களைவானே!* ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!*
நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்* நன்மையே அருள்செய் எம்பிரானே!
நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமது ஆனாய்!*
உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்* ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*
கம்பமா கரிகோள் விடுத்தானே!* காரணா! கடலைக்கடைந்தானே!*
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.
காமர் தாதை கருதலர்சிங்கம்* காண இனிய கருங்குழற் குட்டன்*
வாமனன் என்மரகத வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னைச்*
சேமநன்குஅமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*
நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகள* பழனக் கழனி-அதனுள் போய*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம்பூதங்குடி தானே.
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மாவாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
காஆர் தெங்கின் பழம் வீழ* கயல்கள் பாய குருகு இரியும்*
பூஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
மையார் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய்யார் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய்யார் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே.
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம்பூதங்குடி தானே.
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவமணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம்பூதங்குடி தானே.
கற்றா மறித்து காளியன்தன்* சென்னி நடுங்க நடம்பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம்பூதங்குடி தன்மேல*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல்கைக் கலிகன்றி*
சொல்தான் ஈர் ஐந்து இவை பாட* சோர நில்லா துயர் தாமே.
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து*
தானே இன்அருள் செய்து* என்னை முற்றவும் தான் ஆனான்,*
மீன் ஆய் ஆமையும் ஆய்* நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,*
கான் ஆர் ஏனமும் ஆய்* கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.